புதுடெல்லி: ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கிறார்.
இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அங்கு அதிபர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புக்குப் பிறகு அஜித் தோவல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என்றார்.
இந்நிலையில், வரும் 21-ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.