புதுடெல்லி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவுக்கு அஞ்சல்களை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாலும், வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை வழிமுறைகள் இல்லாத நிலையிலும், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், ஆவணங்கள், 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் உட்பட அனைத்து வகை அஞ்சல்களின் சேவைகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சேவைகளை விரைவில் மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பொருட்களை முன்பதிவு செய்து அனுப்ப முடியாத வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம். மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அஞ்சல்துறை வருத்தம் தெரிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.