ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் இமயமலையில், கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கியது ஆகஸ்ட் 9-ம் தேதி வரை யாத்திரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “பாபா அமர்நாத் சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்.
அவரது ஆசிர்வாதத்தால், குகைக் கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இந்த அற்புதத்திற்காக நான் சிவபெருமானை வணங்குகிறேன். மேலும் புனித யாத்திரையை பக்தர்களுக்கு ஒரு தெய்வீக அனுபவமாக மாற்றுவதில் பங்கு வகிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.