புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் மூலம் அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அதோடு, பாகிஸ்தானின் பல விமானப் படைத் தளங்கள் இப்போது வரை ஐசியுவில் உள்ளன” என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: “ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்தது கொடுமையின் உச்சம். அப்பாவி மக்களிடம் அவர்களின் மதம் என்ன என்று கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றார்கள். இது இந்தியாவை, வன்முறை எனும் நெருப்பில் தள்ளுவதற்கான திட்டமிட்ட சதி. இது இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட சதி. இந்த சதியை நாடு ஒற்றுமையுடன் முறியடித்ததற்காக நாட்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.
இந்த அவையில் இந்தியாவின் தரப்பை முன்னிறுத்த நான் இங்கே நிற்கிறேன். இந்தியாவின் பக்கம் என்ன நடந்தது என்பதை பார்க்காதவர்களுக்கு அதைக் காட்ட நான் இங்கே நிற்கிறேன். ஏப்ரல் 22-ம் தேதி நான் வெளிநாட்டில் இருந்தேன். பஹல்காம் தாக்குதலை அறிந்தவுடன் நான் நாடு திரும்பினேன். பாதுகாப்புக்கான அமைச்சரவையைக் கூட்டினேன். பயங்கரவாதத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்றும், இது எங்கள் தேசிய உறுதிப்பாடு என்றும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினோம்.
ராணுவம் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. எங்கே, எப்போது, எப்படி, எந்த முறையில் தாக்கதலை நடத்துவது என்பதை ராணுவம் முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அனைத்தும் தெளிவாகக் கூறப்பட்டன. பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மூளையாக இருந்தவர்கள் இன்றுவரை தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கும் அளவுக்கு எங்கள் தண்டனை இருந்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கும் என்ற எண்ணம் பாகிஸ்தான் படைகளுக்கு இருந்தது. அவர்கள் அணு ஆயுத அச்சுறுத்தல்களை தொடங்கினர். மே 6-7 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் திட்டமிட்டபடி நமது ராணுவம் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. நமது ஆயுதப் படைகள் 22 நிமிடங்களுக்குள் துல்லிய தாக்குதல்களை நடத்தி பழிதீர்த்தன.
அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அதோடு, பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களும் சொத்துகளும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இப்போது வரை அவர்களின் பல விமான தளங்கள் ஐசியுவில் உள்ளன. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தளங்கள் அழிக்கப்பட்டன. இது நடக்கும் என யாரும் கற்பனை செய்து பார்க்கவில்லை. பஹாவல்பூரும் முரிட்கேவும் தரைமட்டமாக்கப்பட்டன.
கடந்த 10 ஆண்டுகளாக நாம் செய்த தயாரிப்புகள் காரணமாகவே, நமது தாக்குதல்கள் மிகத் துல்லியமாக நடந்தன. இல்லாவிட்டால், நாம் எவ்வளவு இழப்பைச் சந்தித்திருப்போம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் தன்னிம்பிக்கை கொண்ட இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத அமைப்பை அம்பலப்படுத்தின.
ஆபரேஷன் சிந்தூர் 3 விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்று, இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் நாம் நமது சொந்த முறையில் நமது நேரத்துக்கு ஏற்ப பதிலடி கொடுப்போம். இரண்டு, அணு ஆயுத மிரட்டல் இனி இந்தியாவிடம் வேலை செய்யாது. மூன்று, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கங்களையும் பயங்கரவாத அமைப்புகளையும் தனித்தனியாக பார்க்க மாட்டோம் என்பதே அவை” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.