’மகாராஜா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. எனினும் இப்படி ஒரு படம் வெளியாவது குறித்தே பலருக்கும் தெரியாத நிலையில் தான் இதற்கான விளம்பரப் பணிகளும் நடைபெற்றன. முழுக்க முழுக்க கமர்ஷியல் பாணியில் விஜய் சேதுபதி களமிறங்கிய இப்படம் ‘சைலன்ட்’ ஆக சம்பவம் செய்ததா என்று பார்ப்போம்.
பிழைப்புக்காக சமையல் வேலையில் சேர மலேசியா வருகிறார் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி). தனது நண்பரின் சிபாரிசு என்பதால் அவரை வரவேற்று தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார் காகிதம் சேகரிக்கும் பணியாளரான அறிவு (யோகிபாபு). தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு எதிரில் வசிக்கும் ருக்கு (ருக்மிணி வசந்த்) மீது கண்டதும் காதல் வசப்படுகிறார் போல்ட் கண்ணன். காதலிக்கு பணம் தேவை என்பதால் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரும் கடனில் சிக்கிக் கொள்கிறார். மலேசியாவில் பெரிய டான் ஆக இருக்கும் தர்மாவுக்கு (பி.எஸ்.அவினாஷ்) கொடுக்க வேண்டிய அந்த தொகைக்காக வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். அவரின் திட்டம் நிறைவேறியதா? என்பதே ‘ஏஸ்’ படத்தின் மீதிக் கதை.
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். விஜய் சேதுபதிக்காகவே எழுதப்பட்ட கதை போல படம் முழுக்க வி.சே.வின் ஆதிக்கம்தான். முந்தைய ‘மகாராஜா’வின் சாயல் சிறிதும் இன்றி கலகலப்பான, அதே நேரம் மாஸ் ஆக்ஷனிலும் ஈர்க்கிறார். கூடவே யோகி பாபு. ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு படம் முழுக்க இந்த இருவர் கூட்டணி ரசிக்க வைக்கிறது. குறிப்பாக யோகி பாபு அடிக்கும் கவுன்ட்டர்கள் சிரிக்க வைக்கின்றன.
ஒரு ஹெய்ஸ்ட் படத்துக்கு தேவையான பக்காவான ஒன்லைனர். அதற்கு ஏற்ப கதாபாத்திரங்களின் தன்மைகளையும் படம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே பார்ப்பவர்களுக்கு புரிய வைத்து விடுகிறார் இயக்குநர். கண்டதும் காதல், என்ன நடந்தாலும் தப்பித்து விடும் அசாகய ஹீரோ என்ற அதே அரைத்த மாவுதான் என்றாலும் எந்த இடத்திலும் காட்சிகள் எரிச்சல் ஊட்டவில்லை. அந்த வகையில் இயக்குநரை பாராட்டலாம்.
கன்னடத்தில் கலக்கிய ருக்மிணி வசந்த் இதில் குறையற்ற நடிப்பை தந்திருக்கிறார். எனினும் பல இடங்களில் லிப் சிங்க் ஒட்டவில்லை. டயலாக் டெலிவரியில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். பப்லூ பிருத்விராஜ் ஒரு டெரர் வில்லனாக தொடங்கினாலும் அவரது கேரக்டர் போகப் போக அழுத்தமில்லாமல் போய்விடுகிறது. திவ்யா பிள்ளை ஈர்க்கிறார்.
படத்தின் பிரச்சினையே அழுத்தமில்லாமல் எழுதப்பட்ட காட்சிகள் தான். ஹெய்ஸ்ட் படம் என்று முடிவான பிறகு அதற்கான புத்திசாலித்தனமான காட்சிகள் ஒன்றிரண்டாவது இடம்பெற்றிருக்கலாம். குறிப்பாக மலேசியா போன்ற ஒரு நாட்டில் பட்டப் பகலில் வங்கிக்கு பணம் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் இருந்து தனி ஆளாக ஏதோ மிட்டாய் கடையில் பிஸ்கட் திருடிச் செல்வதைப் போல அசால்ட்டாக கொள்ளையடித்துச் செல்கிறார் ஹீரோ. இது போல ஏராளமான அபத்தங்கள்.
பரம்பரை சூதாட்டக் காரர்களை எல்லாம் ஹீரோ முதல் முறையிலேயே இஷ்டத்துக்கு வீழ்த்துகிறார். அதற்கான பின்னணி என்ன? ஹீரோவுக்கு தோல்வியே கிடையாதா? அவர் எது செய்தாலும் அது வெற்றி அடையும் அளவுக்கு திறமை அவருக்கு எப்படி வந்தது? முக்கியமாக இந்தியாவில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? போன்ற கேள்விகளுக்கு கடைசி வரையிலும் படத்தில் பதில் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சி எழுதப்பட்ட விதம் சிறப்பு. எனினும் அதை காட்சிப் படுத்தியதில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
படம் முழுக்க யோகிபாபுவை கலாய்க்கிறேன் பேர்வழி என்று காகிதம் சேகரிக்கும் தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் வசனங்களை வைத்திருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத செயல். அதுவும் தனது வசனத் தேர்வுகளிலும், மேடை பேச்சுகளிலும் ‘சென்சிபிள்’ ஆக யோசிக்கும் விஜய் சேதுபதி இப்படி பேசுவது ஆச்சர்யம் கலந்து அதிர்ச்சியை தருகிறது..
சாம் சிஎஸ்-சின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம். சேஸிங், ஆக்ஷன் காட்சிகளில் படத்தை தாங்கிப் பிடிப்பது அவர்தான். ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் ஓகே ரகம். கரண் ராவத்தின் ஒளிப்பதிவு மலேசியாவை கலர்ஃபுல் ஆக காட்சிப்படுத்தியிருக்கிறது.
மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு ‘ஹெய்ஸ்ட்’ படத்துக்கு தேவையான ஒன்லைனை எடுத்துக் கொண்டு, இன்னும் சற்றே மெனக்கெட்டு புத்திசாலித்தனமான, விறுவிறுப்பான காட்சிகளை வைத்திருந்தால் தமிழில் ‘சூது கவ்வும்’ போன்ற இன்னொரு தரமான படம் கிடைத்திருக்கும். ஆனால் அப்பட்டமான லாஜிக் மீறல்களுடன் மேம்போக்காக அமைக்கப்பட்ட காட்சிகளால் சுமாரான படம் என்ற வகைக்குள்ளேயே நின்றுவிட்டது இந்த ‘ஏஸ்’.