தெலுங்கு இயக்குநர் என்பதால் விஜய் படத்தை இயக்க முடியாமல் போய்விட்டதாக இயக்குநர் கோபிசந்த் மாலினேனி தெரிவித்துள்ளார்.
‘க்ராக்’, ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் ‘ஜாட்’ படங்களை இயக்கியவர் கோபிசந்த் மாலினேனி. இவருடைய படங்கள் அனைத்துமே மாஸ் கமர்ஷியல் படங்கள். தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. ‘விஜய் 69’ படத்துக்கு இவரும் விஜய்யை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார்.
விஜய்யுடனான படம் ஏன் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை என்பதை சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் கோபிசந்த் மாலினேனி. அதில் “‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தை முடித்துவிட்டு, கதை ஒன்றை தயார் செய்து விஜய் சாரை சந்தித்து கூறினேன். ஒரே சந்திப்பில் கதையை ஒகே செய்துவிட்டார். அடுத்ததாக படம் அறிவிப்புக்கான வேலைகளை கவனித்து வந்தேன்.
ஆனால், விஜய் சாருடைய கடைசி படம் என்பதால், தெலுங்கு இயக்குநர் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார் என்பதால் பலரும் தமிழ் இயக்குநரை தேர்வு செய்ய சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்கள். ‘வாரிசு’ படமும் தெலுங்கு இயக்குநர் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இறுதியாக பலருடைய வலிறுத்தலால் தெலுங்கு இயக்குநர் என்பதால் வேண்டாம் என கூறிவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.