‘ஜனநாயகன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத்.
‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டாலும், இதர நடிகர்களின் காட்சிகள் இன்னும் சில நாட்கள் இருக்கிறது. அத்துடன் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.
‘ஜனநாயகன்’ பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத். இப்படத்தினை லலித்குமார் தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமையினை லலித் குமார் தான் கைப்பற்றுவார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
‘ஜனநாயகன்’ படத்துக்கு ஒப்பந்தமாகும் முன்பு தனுஷ் படத்தை தான் இயக்குவதாக இருந்தார் ஹெச்.வினோத். விஜய் படம் ஒ.கே ஆனவுடன் தனுஷும் அப்படத்தினை முடித்துவிட்டு நாம் படம் பண்ணலாம் என்று கூறியதால் தான் ‘ஜனநாயகன்’ படத்தினை ஹெச்.வினோத் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.