ஆகஸ்ட் 22-ம் தேதி விஜயகாந்த் பிறந்த நாளன்று ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
விஜயகாந்த் நடிப்பில் அவரது 100-வது படமாக வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த படமாக மாறியது ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படத்தை 34 வருடங்கள் கழித்து தற்போதைய 4கே தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதி விஜயகாந்த் பிறந்த நாளன்று மறுவெளியீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மறுவெளியீடு உரிமையை ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி சுமார் 500 திரையரங்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தேமுதிக தலைமைகழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ், இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், அரவிந்த்ராஜ் மற்றும் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டில் வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. அவரது வாழ்நாள் முழுவதும் மக்கள் அவரை அன்புடன் அழைக்கும் ‘கேப்டன்’ என்கிற பெயரை அவருக்கு பெற்றுதந்த படம் இது. விஜயகாந்த், சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.