விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்ரமின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம் குமார் இருவருடைய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. இரண்டு இயக்குநர்களுமே வேறொரு நாயகனை வைத்து படங்கள் இயக்கவுள்ளார்கள். இதனால் விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
தற்போது ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் விக்ரமை சந்தித்து கதையொன்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தினை தான் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் ‘இரண்டு வானம்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இதன் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முடித்துவிட்டு விக்ரம் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
விக்ரம் – ‘ராட்சசன்’ ராம்குமார் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமாரும் விக்ரமுக்கு கதை கூறியிருப்பதாக தெரிகிறது. இரண்டு ராம்குமாரில் விக்ரமின் அடுத்த இயக்குநர் யார் என்பது தான் இப்போதைய கேள்வி.