சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இளையராஜா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிசஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நான் இசையமைத்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி தூக்கமேது..’ பாடல் இடம்பெற்றுள்ளது. என்னுடைய அனுமதியில்லாமல் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் பாடலை பயன்படுத்தியுள்ளனர். இது காப்புரிமை மீறிய செயல். உடனடியாக அந்தப் பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் முறையீடு செய்தார். இதையடுத்து, வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.