மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு லைவ் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீடியோவில் பேசிய பாபில் கான, “ஷனாயா கபூர், அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூர், சித்தாந்த் சதுர்வேதி, ராகவ் ஜூயல், ஆதர்ஷ் கவுரவ், அர்ஜித் சிங் போன்றோரை பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இன்னும் நிறைய பேர் இருக்கிறது. பாலிவுட் மிகவும் மோசமானது” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த வீடியோ பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. ஏற்கெனவே சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வந்தது. இந்தச் சூழலில் தற்போது பாபில் கான் வெளியிட்ட இந்த வீடியோ மீண்டும் இதனை தட்டி எழுப்பியுள்ளதாக தெரிகிறது.
சில மணி நேரங்களில் இந்த வீடியோவை பாபில் கான் டெலிட் செய்துவிட்டார். பாபில் கான் வெளியிட்ட இந்த வீடியோ குறித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “கடந்த சில வருடங்களாக, பாபில் கான் தனது பணிக்காகவும், மனநலப் பயணம் குறித்த அவரது வெளிப்படையான கருத்துக்காகவும் மிகுந்த அன்பையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.
மற்ற அனைவரையும் போலவே, பாபிலுக்கும் கடினமான நாட்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று. அவர் பாதுகாப்பாக இருக்கிறார், விரைவில் மீண்டு வருவார் என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “அந்த வீடியோவில் ஷனாயா கபூர், அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூர், சித்தாந்த் சதுர்வேதி, ராகவ் ஜூயல், ஆதர்ஷ் கவுரவ், அர்ஜித் சிங் உள்ளிட்டோரை பற்றி அவர் குறிப்பிட்டது அவர்களுடைய உண்மையான உழைப்பு, நம்பகத்தன்மை மீதான மரியாதை காரணமாகவே ஆகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.