‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் வெளியீட்டு தேதியினை சூசகமாக குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. பல்வேறு பிரச்சினைகளை கடந்து இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஆனால், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது.
இதனிடையே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒவ்வொருவரிடமிருந்தும் மிகுந்த ஆர்வம், அன்பு, நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன. ஆனால் நாங்கள் புன்னகைக்கவும், செயல்முறையை ரசிக்கவும் மறக்கவில்லை.
ஒவ்வொரு காட்சியையும் அனைவரின் ஆதரவும் இல்லாமல், நாங்கள் உருவாக்கி இருக்க முடியாது. ஒரு காட்சியை கூட சமரசம் செய்யாமல், ஒரு அசல், புதிய பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுடன் இறுதிகட்டப் பணிகள் தொடங்குகின்றன. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மேலும் கொண்டாட ஒரு திருவிழா தேதியில் அதை உங்களுக்குக் கொண்டு வரவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் தீபாவளி வெளியீட்டுக்கு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திட்டமிடப்படுவது உறுதியாகி இருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தினை லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்.