ராஜமவுலி இயக்கத்தில் நானி, சமந்தா, கிச்சா சுதீப் நடித்து, 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஈகா’. இது தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரில் வெளியானது. ஈ ஒன்று பழிவாங்குவது போல இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், மலையாளத்தில் வெளியான ‘லவ்லி’ படக்குழு மீது, காப்புரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்தப் படம் கடந்த மே மாதம் வெளியானது. இப்போது பிரைம் வீடியோவில் வெளியான நிலையில் காப்புரிமை மீறல் புகார் எழுந்துள்ளது.
அவர்கள் அனுப்பியுள்ள நோட்டீஸில், “நான் ஈ படத்தின் ஈ கதாபாத்திரம் போன்று ‘லவ்லி’ படத்தில் வடிவமைத்துள்ளனர். எங்கள் அனுமதி இன்றி அந்தக் கதாபாத்திரத்தை நகலெடுப்பது அல்லது அதைப் போன்று வடிவமைப்பது காப்புரிமை மீறல்” என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ‘லவ்லி’ இயக்குநர் திலீஷ் கருணாகரன், தங்கள் படத்துக்கான கிராபிக்ஸ் தனியாகவே உருவாக்கப்பட்டது என்றும், காப்பி ஏதும் அடிக்கவில்லை என்றும் இதை நிரூபிக்க ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.