ராம்சரண் படத்தினை இயக்காதது ஏன் என்று ‘கிங்டம்’ இயக்குநர் கெளதம் தெரிவித்துள்ளார்.
கெளதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கிங்டம்’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், வசூலில் ரூ.70 கோடியை நெருங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெர்சி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் படத்தினை இயக்குவதாக இருக்கிறார் கெளதம். ஆனால், அப்படம் கைவிடப்பட்டது. பின்பு விஜய் தேவரகொண்டா நடிக்க ‘கிங்டம்’ படத்தினை இயக்கியுள்ளார். தற்போது ராம்சரண் படம் நடைபெறாதது ஏன் என்று கெளதம் அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
அதில் கெளதம், “ராம்சரணிடம் கதையொன்றை கூறினேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதையினை முழுமையான திரைக்கதையாக எழுதினேன். அதன் பின் அது ராம்சரணுக்கு பொருத்தமாக இருக்காது என்பதை உணர்ந்தேன். ராம்சரண் போன்ற ஒரு நட்சத்திரத்தை இயக்குவது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. ஆகையால் ஏதோ ஒரு படத்தினை அவரை வைத்து இயக்க விரும்பவில்லை. இதை அவரிடமே கூறினேன். பின்பு இருவரும் சரியான கதை அமையும் போது இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.