ரஜினி – கமல் இணையும் படம் ஏன் நடைபெறவில்லை என்பதற்கான காரணத்தை லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். ‘விக்ரம்’ படத்துக்கு முன்பாக, ரஜினி – கமல் இணைந்து நடிக்க இருந்த படத்தை இயக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். அப்படம் எதனால் நடக்கவில்லை என்பதற்கான காரணத்தை தற்போது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
“ரஜினி சார், கமல் சார் இருவரையும் இணைத்து படம் பண்ண ரொம்பவே முயற்சித்தேன். கரோனாவால் அது நடக்கவில்லை. மூவரும் இணைந்து படம் பண்ண ஒப்பந்தம் வரை சென்றோம். கதையை கூறி முடித்தவுடன், என் முன்னே ரஜினி சார் – கமல் சார் இருவருமே தொலைபேசியில் பேசினார்கள்.
கமல் சார் தயாரித்து நான் இயக்கி ரஜினி சார் நடிப்பதாக இருந்தது. முன்பே இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் இணைத்து படம் பண்ண வைத்திருந்த கதையை இன்னும் வைத்திருக்கிறேன். இரண்டு வயதான கேங்ஸ்டர்களுக்குள் நடக்கும் கதைதான். அப்போது இருக்கும் வியாபாரமும், இப்போது இருக்கும் வியாபாரமும் முற்றிலுமாக மாறிவிட்டது.
அன்று ‘ஜெயிலர்’ மற்றும் ‘விக்ரம்’ படங்கள் வெளியாகவில்லை. இருவரும் இணைந்து இப்போது படம் செய்தால் அதன் வியாபாரம் மிகவும் பெரியது. அதையும் மனதில் வைத்து தற்போது செயல்படுத்தினால் கடினம்தான்” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.