யுவனுடன் பணிபுரிய முடியாமல் போனதற்கான காரணம் குறித்து இயக்குநர் ராம் விளக்கம் அளித்துள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்ஷன் மற்றும் செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை ராம் இயக்கி இருக்கிறார். இதில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின், சித்தார்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் ராம் பேசும்போது, “அனைவரையும் போல நிறை குறைகள் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் நான். யுவன் ரசிகர்களுக்கு ஒன்றைச் சொல்லி கொள்கிறேன். எனக்கு தினமும் கெட்ட வார்த்தையில் மெசேஜ் வருகிறது. முதலில் இந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. அதற்கான முன்பணமும் கொடுத்துவிட்டோம்.
திடீரென்று மதன் கார்க்கி, இப்படத்தில் அதிக பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். அந்த நேரத்தில் திரைப்பட விழாவுக்கு வேறு படத்தை அனுப்ப வேண்டிய சூழல் இருந்தது. இந்தச் சமயத்தில் வேறு 2-3 படங்களில் யுவன் பிஸியாக இருந்தார். இதனால் மட்டுமே பாடல்களுக்கு அவரால் இசையமைக்க முடியாமல் போனது. அப்போது, பின்னணி இசையை நான் செய்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். இதனைத் தொடர்ந்து தான் சந்தோஷ் தயாநிதி இப்படத்துக்கு வந்து பாடல்களை தயார் செய்துக் கொடுத்தார்” என்று பேசினார் இயக்குநர் ராம்.