Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»முதல் சம்பளம்… ‘பட்டாபி எனும் நான்’ – எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 1
    சினிமா

    முதல் சம்பளம்… ‘பட்டாபி எனும் நான்’ – எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 1

    adminBy adminOctober 6, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதல் சம்பளம்… ‘பட்டாபி எனும் நான்’ – எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 1
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் நடிப்பைப் பார்த்து வியந்த தமிழ் சினிமா, குணச்சித்திர நடிகர்களையும் கொண்டாடியே வந்திருக்கிறது. டி.எஸ்.பாலையா, ரங்காராவ், எஸ்.வி.சுப்பையாவில் இருந்து பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில், எம்.எஸ்.பாஸ்கர் தவிர்க்க முடியாத நடிகர்.

    நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட எதைக் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிற கலை, சிலருக்கு மட்டும் சாத்தியம். அதில் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படி மேலே! சமீபத்தில் தேசிய விருது வாங்கியிருக்கும் அவர், ‘இந்து தமிழ் திசை’ வாசகர்களுக்காகத் தனது அனுபவங்களைத் தொடராக எழுதுகிறார்.

    முதல் சம்பளம்: சினிமா ஆசை, எல்லோரையும் போல எனக்கும் சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டது. இதற்கு றெக்கை தந்து பறக்க வைத்தது பள்ளியில் நான் நடித்த நாடகங்கள். நாகப்பட்டினத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, மாரியப்பன் என்ற ஆசிரியர் நாடகங்களை எழுதுவார். அவர் எழுதும் நாடகங்களில் நிச்சயமாக எனக்கொரு ஒரு கதாபாத்திரம் உண்டு, அதோடு யாரைப் பார்த்தாலும் அவர்களைப் போல, அவர்கள் மேனரிசங்களை அப்படியே செய்யும் ஆற்றல் எனக்கு இயல்பாகவே இருந்தது. என் சினிமா பயணத்துக்கு, அது தொடர்பான என் ஆர்வத்துக்கு, அந்த ஆசைக்கு விழுந்த முதல் விதை அதுதான்.

    என் அப்பா – அம்மாவுக்குச் சொந்த ஊர் முத்துப்பேட்டை அருகிலுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு. நான் பிறந்தது நாகப்பட்டினம் அருகிலுள்ள காடம்பாடியில், வளர்ந்தது வெளிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள 11-ம் நம்பர் வீடு. அங்கிருந்த எங்கள் வீட்டின் பெயர் ‘பாஸ்கர பவனம்’.

    என் பெயரைத்தான் அந்த வீட்டுக்கு ஆசையாக வைத்தார் என் அப்பா. நாங்கள் அந்த வீட்டை விற்றுவிட்டாலும் இப்போதும் அதே பெயருடன் அந்த வீடு அங்கே இருக்கிறது.

    அங்குள்ள தேசிய பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். அப்போது டி.கே.சண்முகம், பகவதி அண்ணாச்சி குழுவினரின் நாடகம் ஒவ்வொரு ஊராக நடக்கும். எங்கள் ஊருக்கும் நாடகம் நடத்த வருவார்கள். என் அப்பாவுக்கு அவர்கள் நல்ல பழக்கம்.

    ஒருமுறை அவர்கள் ‘ராஜராஜ சோழன்’ நாடகம் போடும்போது, வழக்கமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகை வரவில்லை. அப்போது, என் அக்கா ஹேமமாலினியை நடிக்க வைக்க முடிவு செய்தார்கள். காலையில் வசனங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அதை நன்றாக மனப்பாடம் செய்து மாலையில் நடந்த நாடகத்தில் சிறப்பாக நடித்தார் என் சகோதரி. ஏகப்பட்டப் பாராட்டுகள்.

    இதைக் கண்டதும் “இவ்வளவு திறமையை வச்சுக்கிட்டு இங்க ஏன் இருக்கணும்? சென்னைக்கு வாங்க…” என்று சண்முகம் அண்ணாச்சி சொன்னார். அவர் அழைப்பின் பேரில் நாங்கள் சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். ராயப்பேட்டையில் தொடங்கியது எங்கள் சென்னை வாழ்க்கை.

    நான் கோபாலபுரம் பள்ளியில் சேர்ந்தேன். பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பியூசி, பி.காம் படித்தேன். படிப்பில் நான் சிறந்த மாணவன் இல்லை. கல்லூரி படிக்கும் போது முரட்டுச் சுபாவம் கொண்டவனாக இருந்தேன். யாருக்கும் அடங்காதவனாக, ரவுடி போல அலைந்து கொண்டிருந்தேன். அடிக்கடி தகராறில் ஈடுபடுவேன். அதிகாலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்து தூங்குவேன். அந்த வயதில் என் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. ஆனால், இப்போது அடிக்கடி அதை நினைத்து, ‘இப்படிலாமா இருந்திருக்கோம்?’ என்று நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன்.

    கல்லூரியை முடித்து வெளியே வந்த போதுதான், வாழ்க்கை என் முன்னே பெரிய பயத்தை நிறுத்தி வைத்திருந்தது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலையும் பயமும் வந்து சேர்ந்தது. பயம் ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா பார்ப்பதை மட்டும் விடவில்லை. அப்போது கையில் பணம் இருக்காது. பழைய பேப்பர்களைச் சேகரித்து, அதை விற்று ரூ.2.90 பைசா சேர்ந்ததும், உடனடியாக சினிமாவுக்கு போய்விடுவேன்.

    நாகப்பட்டினத்தில் இருக்கும்போதும் அப்படித்தான். அங்கு ஸ்டார், பாண்டியன் என இரண்டு தியேட்டர்கள் இருந்தன. பெஞ்ச் டிக்கெட் 30 காசு; தரை டிக்கெட் 10, 15 காசுதான். என் பாட்டியிடம் அதாவது அம்மாவின் அம்மாவிடம் பிடிவாதம் பிடித்து காசு வாங்கி படம் பார்ப்போம். அப்போது தியேட்டர்களில் திரை ‘ஓபனாக’த்தான் இருக்கும். பின்னால் நின்று கொண்டுதான் நடிகர்கள் நடிக்கிறார்கள் என நினைத்த காலம் அது. திரைக்குப் பின்னால் ஆர்வமாக ஓடி நடிகர்கள் இருக்கிறார்களா என்றும் பார்ப்போம். அது அறியாத பருவம்!

    சென்னையில் அக்கா, நடிப்புக்கு முயற்சி செய்தார். அப்போது நடிகர் செந்தாமரை எங்களுக்குப் பழக்கமானார். அவர் எனக்கு அப்பா மாதிரி. அவர்தான் உதய பாஸ்கரன் என்ற என் பெயரை எம்.எஸ்.பாஸ்கர் என்று மாற்றி வைத்தார். அவர், என் சகோதரியிடம் “உனக்கு நடிப்பு வேண்டாம். உன் குரல் நன்றாக இருக்கிறது. டப்பிங் பேசு” என்று சிட்டுக்குருவி படத்தில் பேச வைத்தார். அந்தப் படத்தில் சிவகுமார், சுமித்ரா, மீரா என பலர் நடித்திருந்தார்கள். நடிகை மீராவுக்கு என் சகோதரி குரல் கொடுத்தார். பிறகு சில்க் ஸ்மிதா உள்பட பலருக்கு குரல் கொடுத்திருக்கிறார். அக்காவுக்குத் துணையாக நான் டப்பிங் தியேட்டருக்கு செல்வேன்.

    அப்போது வீனஸ் ஸ்டூடியோவில் ‘சிட்டுக்குருவி’ பட டப்பிங். தேவராஜ் மோகன் இயக்குநர். வழக்கமாக வரும் ஒரு டப்பிங் கலைஞர் அன்று வரவில்லை. வேந்தன்பட்டி அழகப்பன் (‘தங்கமான ராசா’ பட இயக்குநர்) அதில் அசோசியேட்டாக பணியாற்றினார். என்னை அழைத்து, “இங்க வாடா, இதை பேசுறியா?” என்று ஒரு வசனப் பேப்பரை கொடுத்தார். சரி என்று வாங்கினேன்.

    அவர், “மானிட்டர் பார்க்கிறேன்” என்றார். “வேண்டாம். சரியா பேசிருவேன். டேக் போகலாம்” என்றேன். அப்போது கம்ப்யூட்டர் கிடையாது. அதை லூப் சிஸ்டம் என்பார்கள். காட்சியை போட்டார்கள். நான் ஒரே டேக்கில் பேசிவிட்டேன். அவருக்கு ஆச்சரியம். “என்னடா, ஒரே டேக்கில் பேசிட்டே?” என்று கேட்டார் அவர். “உள்ளே இருந்து ஒவ்வொருவரும் பேசுவதை, மனதுக்குள் பேசிப் பேசி பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு எளிதாக வந்துவிட்டது” என்றேன். என்னைத் தட்டிக் கொடுத்தார்.

    முடிந்ததும், “சரி, நான் கிளம்பறேன்” என்றேன். அவர், “முதன் முதலா டப்பிங் பேசியிருக்கே. சும்மா போகக் கூடாது” என்று இரண்டு பத்து ரூபாய்களையும் ஒரு 5 ரூபாயையும் கொடுத்தார். அந்த 25 ரூபாய்தான் நான் உழைத்து வாங்கிய முதல் சம்பளம்.

    (திங்கள் தோறும் பேசுவோம்)



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    சாலையோர உணவகத்தில் ரஜினிகாந்த்! – வைரலாகும் புகைப்படம்

    October 6, 2025
    சினிமா

    டியூட் படத்துக்கு மமிதாவை தேர்வு செய்தது எப்படி? – சொல்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

    October 6, 2025
    சினிமா

    பிக் பாஸ் சீசன் 9 தொடக்கம்: போட்டியாளர்களின் முழு பட்டியல்!

    October 5, 2025
    சினிமா

    80, 90-களின் திரைப் பிரபலங்கள் பங்கேற்ற ரீ-யூனியன் நிகழ்வு!

    October 5, 2025
    சினிமா

    மும்பையில் புது வீட்டில் குடியேறினார் சமந்தா

    October 5, 2025
    சினிமா

    ஒரு வார கால பயணமாக இமயமலை சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

    October 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை | ரோந்து பணி சென்றபோது போலீஸ் எஸ்ஐ-யை கடித்த நாய்
    • பி.டி.எஸ் தலைவர் ஆர்.எம்.
    • 35 சிக்சர்களுடன் முச்சதம் விளாசிய இந்திய வம்சாவளி ஆஸி. வீரர் ஹர்ஜஸ் சிங்!
    • ‘பசிக்கு சோறு கேட்கிறார்… பந்திக்கு தாமதமாக வருகிறார்…’ – காங்கிரஸை கலாய்க்கும் கழக கண்மணிகள்
    • பயோஹேக்கர் பிரையன் ஜான்சன் தனது அதிர்ச்சியூட்டும் million 2 மில்லியன் 5 மணி நேர தினசரி வழக்கத்தை வெளிப்படுத்துகிறார், இது வயதை மாற்றியமைக்கலாம் மற்றும் அவருக்கு என்றென்றும் வாழ உதவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.