மீண்டும் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்து பணிபுரிய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இப்படத்தின் இறுதி பதிப்பை பார்த்த ரஜினி, லோகேஷ் கனகராஜை வெகுவாக பாராட்டியிருக்கிறார். மேலும், மீண்டும் இணைந்து பணிபுரியலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் பெரும் உற்சாகமாகன லோகேஷ் கனகராஜ், ரஜினிக்காக வேறொரு கதையை தயார் செய்துவிட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.
ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி எப்போது இணையும், யார் தயாரிப்பாளர் உள்ளிட்ட எதுவுமே இன்னும் முடிவாகவில்லை. அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து ‘கைதி 2’, ஆமிர்கான் நடிக்கும் படம் என மும்முரமாக இருக்கிறார். இவை அனைத்தையும் முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்குவார் என தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி‘ படத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.