மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க புதிய படமொன்று தயாராகவுள்ளது.
பாண்டிராஜ் – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’. தமிழகத்தில் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் பங்குத் தொகை ரூ.25 கோடியை தாண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. ’தலைவன் தலைவி’ படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜின் அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது அவரது இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க அட்வான்ஸ் தொகை ஒன்று விஜய் சேதுபதியிடம் இருந்தது. அதனை பாண்டிராஜ் படத்தை வைத்து திட்டமிட்டு இருக்கிறார்கள்.
’தலைவன் தலைவி’ படத்தைப் போலவே, இப்படமும் முழுக்க கிராமம் சார்ந்த கதைக்களமாகவே இருக்கும் என்கிறார்கள். பூரி ஜெகநாத் படத்தை முடித்துவிட்டு, ‘மகாராஜா 2’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி. அதனை முடித்துவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்குவார் என தெரிகிறது.