‘கருடனு’க்குப் பிறகு, சூரி நாயகனாக நடித்திருக்கும் ‘மாமன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. படத்தின் டிரெய்லரே ஏகப்பட்ட லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. ‘விலங்கு’ வெப் தொடரை அடுத்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருக்கும் படம் இது. வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநரிடம் பேசினோம்.
“நான் இயக்கிய ‘விலங்கு’ வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதும் அடுத்தப் படத்துக்கான முயற்சியில இருந்தேன். அப்ப தயாரிப்பாளர் லார்க் ஸ்டூடியோஸ் குமார் அண்ணன், சூரி அண்ணனை வச்சு படம் பண்ணலாம்னு கூப்பிட்டார். போனேன். அப்ப நான் வச்சிருந்த சில லைன்களை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. ஆனாலும் சூரி அண்ணனே, ஒரு கதை வச்சிருக்கிறதா, தயாரிப்பாளர் சொன்னார். அவருக்கு ஒரு ஃபேமிலி டிராமா கதை பண்ணணும்னு ஆசை இருந்தது. நானும் ‘விலங்கு’ போல இல்லாம, வேற ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சேன். சூரி அண்ணன் சொன்ன கதை பிடிச்சிருந்தது. அதுக்கு திரைக்கதை ரெடி பண்ணி ஆரம்பிச்சோம். அப்படி உருவானதுதான் இந்த ‘மாமன்’” என்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.
ஃபேமிலி டிராமான்னா, தாய்மாமன் உறவைச் சொல்ற படமா?
பொதுவா எல்லா குடும்பங்கள்லயும் எவ்வளவு அன்பு இருக்கோ, அவ்வளவு பிரச்சினைகளும் இருக்கும். சின்ன சின்ன மோதல்கள், ஈகோ… அதை வச்சு ஒரு கதை பண்ணியிருக்கோம். நாம சின்ன பிரச்சினைன்னு நினைப்போம், அது பெரிய பிரச்சினையா மாறி எதிர்ல வந்து நிற்கும். அதனால வர்ற பிரிவு, பிறகு எப்படி குடும்பம் ஒண்ணு சேருதுன்னு கதை போகும். பார்க்கிறவங்க, ‘நம்ம குடும்பத்துலயும் இப்படி நடந்திருக்கே’ன்னு கதையோட ‘ரிலேட்’ பண்ணிக்க முடியும். இது வெறும் தாய்மாமன் உறவை சொல்ற படம் மட்டுமல்ல. அனைத்து உறவையும் பேசற படம். அக்கா- தம்பி படம்னு சொல்லலாம். ஹீரோ- ஹீரோயின் படம், தாத்தா- பாட்டிக்கான படம், அம்மா – மகனுக்குமான படம், அக்காவுக்கும் அவர் கணவருக்குமான கதைன்னு நிறைய சொல்லலாம். கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்ங்கறது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
அப்படின்னா, கூட்டுக் குடும்பம் பற்றி ஏதும் மெசேஜ் சொல்றீங்களா?
இன்னைக்கு பிழைப்புக்காக நிறைய பேர் சொந்த ஊர், உறவை விட்டுப் புலம் பெயர்ந்துட்டாலும் அந்த உறவுகளை, ஏதோ ஒரு விழாவில, கோயில் திருவிழாவுல, தொடர்ந்துகிட்டுத்தான் இருக்காங்க. வெளிநாட்டுல இருந்தா கூட அந்த ஒரு விழாவுக்காக, வருஷத்துல ஒரு நாள் உறவைத் தேடி ஊருக்கு வர்றதை பார்த்துட்டுத்தாம் இருக்கிறோம். அந்த உறவு தர்ற மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் வேற எதுவும் தராது. இந்தப் படம் அதையும் பேசுது. உறவோட சேர்ந்து வாழணும்னு அறிவுரையாவோ, மெசேஜாகவோ இல்லாம, கதையோட சேர்ந்து சொல்றோம். உறவுகளை ஞாபகப்படுத்தற படம்னும் சொல்லலாம்.
சூரியோட கதையா இருந்தாலும் அவர் எப்படி இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துறார்?
சூரி அண்ணனை எல்லோருக்கும் பிடிக்கும். பெரும்பான்மையான மக்களோட நாயகனா அவர் இருக்கார். அவரை எல்லோருக்கும் பிடிக்கறதுக்கான காரணம் அந்த யதார்த்தமான தமிழ் முகம். இந்தப் படத்து கேரக்டருக்கு அவர்தான் சரியான சாய்ஸ். இப்படியொரு அண்ணன், இப்படியொரு தம்பி, இப்படியொரு மகன், இப்படியொரு சித்தப்பா, இப்படியொரு தாய் மாமன், நமக்கு கிடைக்க மாட்டாங்களாங்கற உணர்வை இந்தக் கதையும் இந்தப் படமும் கண்டிப்பாக கொடுக்கும். சூரி அண்ணனோட எமோஷனலான நடிப்பும் பேசப்படும்.
நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்களே?
இதன் கதை, திருச்சியில நடக்கிறதா இருந்தாலும் எல்லா ஊருக்கும் எல்லோருக்கும் பொருந்துற மாதிரிதான் இருக்கும். கதைக்கு நியாயமா, நிறைய உறவுகளை வச்சு பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். அதனால பெரிய நட்சத்திரங்களை நடிக்க வச்சோம். ‘லப்பர் பந்து’ல மிரட்டுன சுவாசிகா இதுல சூரிக்கு அக்காவா நடிச்சிருக்காங்க. ஐஸ்வர்யா லட்சுமி, நாயகியா நடிச்சிருக்காங்க. இவங்க இல்லாம குட்டி பையனுக்கும் கதையில முக்கியத்துவம் இருக்கு. குட்டி பையனா பிரகீத் சிவன் நடிச்சிருக்கார். இவர், என் மகன். பிறகு ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விமலா சங்கர்னு நிறைய நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க. ஒரு குடும்பத்தை திரையில பார்க்கிற உணர்வை இந்தப் படம் கொடுக்கும்.