தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த டீசரை வெளியிட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 18 வினாடிகள் கொண்ட இந்த டீசர் முழுவதும் பாலகிருஷ்ணாவின் ஆட்சி தான். தனது டிரேட்மார்க் பஞ்ச் வசனங்கள், எத்தனை பேர் வந்தாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்வது என டீஸரின் ஷாட்கள் உள்ளன.
பனிபடர்ந்த மலை ஒன்றின் அழகான ஷாட் உடன் ஆரம்பமாகிறது ‘அகண்டா 2’ டீசர். இதற்கு அடுத்த மூன்றாவது ஷாட்டில் கையில் சூலாயுதம் ஏந்திய படி பாலகிருஷ்ணா என்ட்ரி கொடுக்கிறார். சுமார் 10 பேரை சூலத்தால் தன் புஜங்களில் தூக்கியபடி ‘என் சிவன் அனுமதி இல்லாம அந்த எமனே கண் எடுத்து பார்க்கமாட்டான். நீ பாக்கிறீயா? அப்பாவிங்க உயிர் எடுத்துடுவியா?’ என வில்லனை நோக்கி கேள்வி கேட்கிறார் பாலகிருஷ்ணா. தொடர்ந்து அடுத்த ஷாட்டில் அப்படியே அவர்களை தூக்கி போடுகிறார். அதற்கடுத்த காட்சியில் சூலத்தை சுத்தவிட்டு தன்னை தாக்க வருபவர்களை தாக்குகிறார். தொடர்ந்து யுத்தத்தில் இறங்கியது குறித்து அறிவிக்கப்படுகிறது.
இதோடு பாலகிருஷ்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த படக்குழு வரும் செப்டம்பர் 25-ம் தேதி தசரா விழாவினை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் டீசரில் இடம்பெற்றுள்ளது.
அகண்டா 2: போயபதி சீனு – பாலகிருஷ்ணா இணைப்பில் வெளியான ‘அகண்டா’ படத்தின் முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் 2-ம் பாகம் உருவாகி வருவதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் நாயகியாக சம்யுக்தா நடித்து வருகிறார். வில்லனாக நடிகர் ஆதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கும்பமேளாவில் தொடங்கப்பட்டது.
‘அகண்டா 2’ படத்தினை பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வனி வழங்க, 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. செப்டம்பர் 25-ம் தேதி வெளியீடு என்று படப்பூஜை அன்றே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். >>டீசர் லிங்க்