‘மனதை திருடி விட்டாய்’ படத்தின் இயக்குநர் நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 59.
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் மிகவும் பிரபலமான படம் ‘மனதை திருடி விட்டாய்’. இப்படத்தின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நாராயணமூர்த்தி. இவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 59.
’மனதை திருடி விட்டாய்’ படத்துக்குப் பிறகு ‘ஒரு பொண்ணு ஒரு பையன்’ படத்தினை இயக்கியிருந்தார். படங்கள் மட்டுமன்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நந்தினி’, ‘ராசாத்தி’, ‘ஜிமிக்கி கம்மல்’, ‘அன்பே வா’, ‘மருமகளே வா’ உள்ளிட்ட தொடர்களையும் இயக்கியுள்ளார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், லோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.
மகன் லோகேஸ்வரன் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். அவர் வந்தவுடன் தான் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. மகன் இந்தியா திரும்பியவுடன் செப்டம்பர் 26-ம் தேதி இவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாராயண மூர்த்தி மறைவுக்கு வெள்ளித்திரை, சின்னத்திரையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.