புத்தாயிரத் தலைமுறையிலிருந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ புகழ் அபிஷன் ஜீவிந்த் போன்று இப்போதுதான் ஒன்றிரண்டு இயக்குநர்கள் தலைகாட்டியிருக்கிறார்கள். அதேபோல் பாடலாசிரியர்களின் நுழைவும் தொடங்கிவிட்டதற்கு தேவ் சூர்யா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆங்கில வழியில் பயின்றிருந்தாலும் பலர் நல்ல தமிழில் எழுதப் பழகியிருக்கிறார்கள். அப்படியொருவர் தான் தேவ் சூர்யா.
சபரிஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி – மெஹ்ரீன் பிர்சாதா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘இந்திரா’ படத்தில் தேவ் சூர்யா எழுதிய ‘சொல்லாமல் கொள்ளாமல் வெல்வானே.. கண்மூடி வேட்டைக்குச் செல்வானே.. எமன் யாரு..?’ என்கிற பாடலை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள் இணையவாசிகள். அப்பாடல் வரிகளை வைத்து மீம்களும் உலவத் தொடங்கிவிட்டன.
‘இந்திரா’ படத்தின் கதையில், நாயகனே வில்லனா அல்லது வில்லன் என்று கருதப்படுபவன்தான் நாயகனா என்கிற உண்மை புலப்படும் தருணத்தைப் பாடல் இடம்பெறும் சூழ்நிலையாக இயக்குநர் கொடுக்க, அதற்கு தேவ் சூர்யா எழுதிய இப்பாடல் இணையத்தில் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.