சென்னை: தன்னைப் பற்றியும் தனது கணவர் விக்னேஷ் சிவன் பற்றியும் சமூக வலைதளங்களில் பரவிய ‘பிரேக்-அப்’ வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் என்ற பெயரில் ஒரு புகைப்படம் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதில் “ஒரு முட்டாளை திருமணம் செய்யும்போது திருமணம் என்பது ஒரு தவறு என்று ஆகிறது. உங்கள் கணவரின் நடவடிக்கைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம் ஆண்கள் உண்மையில் வளர்வதே இல்லை” என்று வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால் அது உண்மையிலேயே நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இருந்து எடுக்கப்பட்டதா அல்லது நெட்டிசன்களில் போட்டோஷாப் ஜாலமா என்று உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் பலரும் அந்த ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்து தங்கள் ஊகங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் தன்னை பற்றியும் தன் கணவர் விக்னேஷ் சிவன் பற்றியும் பரவி வந்த பிரேக்-அப் வதந்திகளுக்கு தற்போது நயன்தாரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “எங்களை பற்றி வரும் கிறுக்குத்தனமான செய்திகளுக்கு எங்களுடைய ரியாக்ஷன்” என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.