பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். குறிப்பாக அவருடைய முகபாவனைகள், தனித்துவச் சிரிப்பு மிகவும் பிரபலம். சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இன்று (ஆக.2) மாலை சிகிச்சை பலனின்றி மருத்துமவனையில் காலமானார்.
மதன் பாபு என்ற பெயரை ‘வானமே எல்லை’ படத்தில் மதன் பாப் என்று மாற்றினார் இயக்குநர் கே.பாலசந்தர். இவரது இயற்பெயர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி. முதலில் இசையமைப்பாளராகவே தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்பு நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர் என பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்டார். தமிழில் 150-க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து புகழ் பெற்றவர் மதன் பாப். இவரது வித்தியாசமான சிரிப்பு மிகவும் பிரபலம். சன் தொலைக்காட்சியில் இவர் தொகுப்பாளராக பணியாற்றிய ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதனைப் பின்பற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் கேட்டவை, வானமே எல்லை, தேவர் மகன், ஜாதி மல்லி, உழைப்பாளி, திருடா திருடா, மகளிர் மட்டும், சதிலீலாவதி, பூவே உனக்காக, தெனாலி, ஃபிரெண்ட்ஸ், பம்மல் கே சம்பந்தம், கிரி, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் இவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதன் பாப் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.