பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு புதன்கிழமை அன்று வெளியானது.
இந்த படத்துக்கு ‘மா வந்தே’ என பெயரிட்டுள்ளது படக்குழு. ‘ஒரு தாயின் கீதம்’ என்ற டேக்லைனும் இதில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் மோடியின் பால்ய காலம் முதல் தேசிய தலைவரானது வரையிலான அவரது வாழ்க்கை சொல்லப்பட இருப்பதாக தெரிகிறது. இதில் பிரதமர் மோடிக்கும், அவரது தாயார் ஹீராபென் மோடிக்கும் இடையிலான உறவு குறித்தும் சொல்லப்பட உள்ளதாக தகவல்.
இந்த படம் பான் இந்தியா பாணியில் பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை கிரந்திகுமார் சி.ஹெச் இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக கே.கே.செந்தில் குமார், இசையமைப்பாளராக ரவி பஸ்ரூர், படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத், கலை வடிவமைப்பாளராக சாபு சிரில், சண்டை வடிவமைப்பாளராக கிங் சாலமன் பணியாற்றுகின்றனர். இந்த படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வீர் ரெட்டி தயாரிக்கிறார்.
“பிரதமர் மோடியின் பயோபிக் படமான ‘மா வந்தே’ படத்தில் நான் பிரதமர் மோடியாக நடிக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பால்ய காலத்தில் நான் அகமதாபாத்தில் வளர்ந்தேன். அதனால் முதல்வராக அவரை நான் அறிவேன். பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023-ல் அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன்.
அவரது பாத்திரத்தில் நடிப்பது ஒரு நடிகராக எனக்கு ஊக்கம் தருகிறது. அவரது அரசியல் பயணம் அசாதாரணமானது. இந்தப் படத்தில் பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கை மட்டுமல்லாது அவரது வாழ்க்கை குறித்தும் இருக்கும். ‘ஒருபோதும் தலைவணங்காதே’ என அவர் கூறிய அந்த வார்த்தைகள் எனக்குள் நம்பிக்கை தருகிறது. இந்தப் படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும்” என உன்னி முகுந்தன் கூறியுள்ளார்.
உன்னி முகுந்தன் நாயகனாக நடித்த மார்க்கோ, மாளிகபுரம் உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றுள்ளன. தமிழில் சூரி மற்றும் சசிகுமார் உடன் இணைந்து ‘கருடன்’ படத்தில் அவர் நடித்துள்ளார்.