நடிகை மிருணாள் தாக்குர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர், நடிகர் தனுஷை காதலிப்பதாகச் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், மிருணாள் தாக்குர். சில வருடங்களுக்கு முன் நடிகை பிபாஷா பாசு பற்றி அவர் பேசிய வீடியோ, இப்போது வைரலானது. அதில், “நான் பிபாஷா பாசுவை விட நன்றாக இருக்கிறேன். ஆண்களைப் போல தசைகளைக் கொண்டவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? பிபாஷா பாசு இருக்கிறார்” என்று அவரை உருவக் கேலி செய்யும் விதமாகப் பேசியிருந்தார். இது சர்ச்சையானது.
இதற்குப் பதிலளித்த பிபாஷா பாசு, “வலிமையான பெண்கள் எல்லோரையும் உயர்த்தி விடுவார்கள். அழகான பெண்களே, உங்கள் தசைகளை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். அதுவும் பெண்மைக்கு அழகுதான். பெண்கள் உடல் ரீதியாக வலிமையாக இருக்கக் கூடாது என்ற முட்டாள்தனமான சிந்தனையை மாற்றுங்கள்” என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மிருணாள் தாக்குர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அவர், ‘‘எனது 19 வயதில் பல முட்டாள்தனமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். நான் நகைச்சுவையாகச் சொன்ன வார்த்தைகள் கூட புண்படுத்தும் என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. அதற்காக நான் இப்போது மிகவும் வருந்துகிறேன். யாரையும் உடல் ரீதியாக அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல. அழகு எல்லா வடிவங்களிலும் வருகிறது என்பதைப் காலப்போக்கில் புரிந்துகொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.