ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மலையாளப்படம் ‘த்ரிஷ்யம்’. இந்தப் படம் மலையாளத்தில் வசூல் அள்ளியதை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் இதன் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்தனர். இந்நிலையில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ரஜினிகாந்திடம்தான் முதலில் கேட்டதாக இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “த்ரிஷ்யம் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டினார். அதன் ரீமேக்கில் நடித்தால், படத்தில் ஹீரோவை போலீஸ் தாக்குவது போன்று வரும் காட்சியைத் தனது ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று தயங்கினார். சில நாட்களுக்குப் பிறகு அந்த கேரக்டரில் நடிக்க சம்மதித்தார். ஆனால் அதற்குள் கமல்ஹாசன் நடிப்பில் படத்தைத் தொடங்கிவிட்டதால், அவர் நடிக்க இயலாமல் போய்விட்டது” என்று கூறியுள்ளார்.