எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்தவர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ். சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன. முன்னதாக, எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் ஆகியோருடன் பல நாடகங்களில் நடித்திருக்கும் இவர், சர்வாதிகாரி, பூமாலை, ஆரவல்லி உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவரது கடைசிப் படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஊர்க்காவலன்’.
தனது இறுதிக் காலம் வரை நாடகங்களில் நடித்து வந்த அவர் பெயரில் ‘எஸ்.எஸ்.சிவசூரியன் கலைக்கூடம்’ மற்றும் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் இளவரசு, எழுத்தாளர் பவா செல்லதுரை, நூற்றாண்டு விழா கொண்டாடும் எஸ்.எஸ்.சிவசூரியன் மகனும் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர்.

