திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் வியாழக்கிழமை (ஜூலை 3) மாலை வந்தனர். பழநி அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் மலைக் கோயிலுக்கு சென்றனர். அங்கு, அவர்களை கோயில் அதிகாரிகள் வரவேற்றனர்.
வைதீகாள் அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் உட்பிரகாரத்தில் உள்ள ஆனந்த விநாயகர், போகர் ஜீவ சமாதியில் வழிபட்டனர்.
கோயில் பணியாளர்கள், பக்தர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர், மீண்டும் ரோப் கார் மூலம் அடிவாரத்துக்கு வந்த அவர்கள் காரில் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு சென்றனர். நடிகை நயன்தாராவின் திடீர் வருகையால் கோயில் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.