சென்னை: ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கதையை முதலில் சொன்ன ஹீரோ அதர்வா தான். நான் அவரைச் சந்தித்து கதையை சொன்னேன். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதர்வா நடிக்கவில்லை என்றதும் மிகவும் வருத்தப்பட்டேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டி என் ஏ’. ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கணேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் மாரி செல்வராஜ் பேசும் போது, “இப்படத்தை என் உதவியாளர்களுடன் பார்த்தேன். அதன் பிறகு திவ்யா கதாபாத்திரத்தின் வடிவமைப்பு குறித்து விவாதித்தோம். திவ்யாவுக்கு என்ன டிஸ்ஸார்டர் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் உதவியாளர்கள் மிகவும் எனர்ஜியாக இருப்பார்கள். துருதுருவென்று ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பார்கள் என்று விளக்கினார்.
நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டே படம் பார்க்கிறேன். ஆனால் நான் இங்கு மேடையில் வந்த பிறகு அவருடைய நடவடிக்கையை கவனித்தேன். அவருடைய நடவடிக்கையை பார்த்து தான் கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார்களோ என நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவர் உற்சாகமாக இருக்கிறார். இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு இயக்குநர் நெல்சனை மிகவும் பிடிக்கும். ஏனெனில் ‘ஒரு நாள் கூத்து’ படத்தை பார்த்தேன். பொதுவாக சினிமாவை நாம் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது. யார் என்ன சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாக நம்முடைய கற்பனைக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுத்து அந்த கதைகளை திரையில் கொண்டு வருவது. மற்றொரு வாய்ப்பு என்னவென்றால் எது மக்களுக்கு பிடிக்கிறது, எது வெற்றிகரமானதாக இருக்கிறது, எது நம்மை முன்னிலைப்படுத்தும், எது நம்மை பிரபலமானவராக உயர்த்தும் என்பது என எண்ணி படத்தை இயக்குவது மற்றொரு வகை.
இதில் நெல்சன் இயக்கிய நான்கு படங்களையும் எடுத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அவர் கனமான கதைகளை தேர்வு செய்திருப்பார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் கதையின் தொடக்கத்தையே மிகவும் முதிர்ச்சியாக காட்சிப்படுத்தி இருப்பார். அதை பார்த்து அப்போதே நான் வியந்து இருக்கிறேன். அவருடைய படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உள்ளார்ந்த வாழ்க்கை இருக்கும். எங்களுடைய தலைமுறையை சார்ந்த இயக்குநர்களில் அவர் தனித்து நிற்கிறார். அவருடைய படைப்புகளில் அவருடைய சமூக பொறுப்புணர்வு தெரிகிறது. சட்டென்று பெரும்பாலான மக்களுக்கு தென்படாத கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதை திரையில் கொண்டு வருகிறார்.
இந்தப் படத்தை பார்க்கும் போது ஓடும் ஆற்றில் ஒரு இலையை தூக்கி போட்டால் அது எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் செல்வது போல், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வுகளை தரக்கூடிய படம் இது. இது போன்ற படத்தை வழங்குபவர் தான் நெல்சன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
முரளி சாருடைய படங்களை அவ்வளவு ரசித்து பார்ப்பேன். அவருடைய மகனை வைத்து முதல் படம் பண்ண வேண்டும் என நினைத்தேன். அதர்வாவுக்கு இது நியாபகம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கதையை முதலில் சொன்ன ஹீரோ அதர்வா தான். நான் அவரைச் சந்தித்து கதையை சொன்னேன். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதர்வா நடிக்கவில்லை என்றதும் மிகவும் வருத்தப்பட்டேன்.
நாம் படுத்து எழுந்து சென்ற இடத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும், பில் கட்டுவதற்காக ஒரு கவுண்டரில் நின்று கொண்டிருப்போம். அந்த கவுண்டருக்குள் ஒரு கதை இருக்கும். அது நமக்குத் தெரியாது. நாம் ஒரு டாக்ஸிக்குள் பயணித்திருப்போம். அந்த டாக்ஸிக்குள் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கும். அது நமக்கு தெரியாது. இப்படி நாம் அங்கங்கே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே சென்றிருப்போம். இதுபோல் நாம் படுத்து எழுந்த, தவித்த இடங்களில் மனிதநேயம் கொண்ட ஒரு கதை இருக்கும். அதை பிரதிபலிக்கிற படமாகத்தான் ‘டி என் ஏ’ இருக்கிறது.
நாம் நம்பிக்கையுடன் பழகும் சமூகத்தில் உள்ளவர்களிடம் இப்படி ஒரு விஷயம் நடந்தால் எப்படி இருக்கும்? என்ற விஷயமும், மனிதத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவர்களும், மனிதத்தை மதிக்காதவர்களும் வாழும் இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ்வது என்பதையும், அதற்குள் நாம் எப்படி சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் இந்தப் படம் பேசுகிறது” என்று பேசினார் மாரி செல்வராஜ்.