‘பராசக்தி’ படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்காரா. டான் பிக்சர்ஸ் மற்றும் சுதா கொங்காரா இணைந்து தயாரித்து வரும் படம் ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
ஏனென்றால், சமீபத்தில் இதன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனை தொடர்பாக எந்தவொரு விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனை முன்வைத்து பல்வேறு வியூகங்கள் வெளியாகிவந்தன.
இதனிடையே, சுதா கொங்காரா விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, ”இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. ‘மதராஸி’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் வருகைக்காக காத்திருக்கிறேன். அது கொலம்போவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
‘பராசக்தி’ வெளியீடு குறித்து நான் மட்டும் முடிவு எடுக்க முடியாது. தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ‘ஜனநாயகன்’ படத்துடன் வெளியீடு என்று பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எங்களுடைய தரப்பில் இருந்து எதுவும் சொல்லவில்லை” என்று தெரிவித்துள்ளார் சுதா கொங்காரா.