பசில் ஜோசப் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மலையாள திரையுலகில் நடிகராகவும், இயக்குநராகவும் முன்னணியில் இருப்பவர் பசில் ஜோசப். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படம் இந்திய திரையுலகில் பலருடைய கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நாயகர்கள் இவரிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். அதே வேளையில் மறுபுறம் இவருடைய நடிப்பில் வெளியான படங்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, ‘சக்திமான்’ படத்தை பசில் ஜோசப் இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்குப் பிறகு எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது. தற்போது பசில் ஜோசப் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அட்லி படத்தினை முடித்துவிட்டு, பசில் ஜோசப் படத்தினை தொடங்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்பட இருக்கிறது. பசில் ஜோசப் – அல்லு அர்ஜுன் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிவிக்ரம் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதால், அல்லு அர்ஜுன் தரப்பில் இருந்தே இந்தச் செய்தி வெளியாகி இருக்க வேண்டும் என்று தெரிகிறது.