முதன்முறையாக நிஜ சிங்கத்தை வைத்து ‘சிங்கா’ என்ற படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
மதியழகன் மற்றும் சித்தர் ஃபிலிம் ஹவுஸ் இணைந்து தயாரிக்கவுள்ள படம் ‘சிங்கா’. ரவிதேவன் இயக்கவுள்ள இப்படத்தில் ஷ்ரிதா ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதில் இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்தை வைத்து முழுநீளப் படமும் உருவாக்கவுள்ளார்கள்.
கமலிடம் உதவி இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரி மாணவராகவும் இருந்தவர் கே.சி. ரவிதேவன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக ‘சிங்கா’ உருவாகிறது. இப்படம் குறித்து ரவிதேவன், “சவாலான இப்படத்தை அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உருவாக்கி வருகிறோம். நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலரை அணுகிய போது, அவர்களுக்கு கதை பிடித்திருந்த போதிலும் நிஜ சிங்கத்துடன் நடிக்க தயங்கினர். ஆனால் ஷ்ரிதா ராவ் துணிச்சலுடன் நடிக்க முன் வந்ததோடு, சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.
இப்படத்தில் உள்ள ஒரு எதிர்மறை பெண் கதாபாத்திரம் 300 ஓநாய்களுடன் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கு உகந்த, பயப்படாத நடிகையை கடுமையான தேடலுக்கு பிறகு கண்டறிந்தோம். ‘1945’, ‘பொதுநலன் கருதி’ மற்றும் ‘ஜவான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த லீஷா எக்லேர்ஸ் அதில் நடிக்கவுள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜாம்பியா, கோவா, தென்காசி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மொழிகளைக் கடந்த கதை இது என்பதால், ‘சிங்கா’ படத்தை பான்-இந்தியா திரைப்படமாக எடுத்து வருகிறோம். இப்படத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
‘சிங்கா’ படத்திற்கு இசையமைப்பாளராக அம்ரீஷ், ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, சண்டைப் பயிற்சியாளராக ஸ்டன்னர் சாம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.