மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் 100 வயதை கடந்துவிட்டதால், அவருக்கு உடல்ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்தச் சந்திப்பு தொடர்பாக இயக்குநர் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பதிவில், “ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தோழர் ஆர்.நல்லகண்ணு ஐயா எப்படி இருக்கிறார், அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் அக்கறையோடு விசாரித்தார். தோழர்களிடம் பேசி முறையான அனுமதி பெற்று இன்று நல்லகண்ணு தோழரை நானும் சிவகார்த்திகேயனும் சந்தித்தோம். விரைந்து நலம்பெற்று வாருங்கள் தோழர்” என்று தெரிவித்துள்ளார்.