பிரபல தமிழ் நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்.
தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்தவர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (மே 10) மாலை சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.