நடிகர்களிடம் தயாரிப்பாளர்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நன்றி அறிவிப்பு விழாவில் சசிகுமார் பேசினார். நடிகர்களின் சம்பளம் குறித்த அவரது கருத்து பல்வேறு தரப்பினரையும் ஈர்த்துள்ளது.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.
இந்தச் சந்திப்பில் சசிகுமார் பேசும்போது, “‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றியடைந்துவிட்டதால் சம்பளத்தை ஏற்றி விடுவீர்களா எனக் கேட்கிறார்கள். கண்டிப்பாக ஏற்ற மாட்டேன். இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டில்தான் எடுக்க வேண்டும். அப்போது தான் அது வெற்றி பெறும். இந்தப் படம் நிறையப் பேரின் கனவை நனவாக்கியுள்ளது. நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது. ஒரே மாதிரி படம் பண்ண வேண்டாம்; வித்தியாசமான படம் பண்ணலாம்; வேறு மாதிரி ஜானர் படம் பண்ணலாம் என்ற ஒரு நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்திருப்பதாக நினைக்கிறேன்.
மக்கள் குடும்பமாக திரையரங்குக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். எனக்கு பல ஆண்டுகளுக்கு அப்புறம் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட வெற்றியாக நினைக்கவில்லை. இந்தப் படத்தின் வெற்றியை வைத்து ‘சசிகுமார் ஜெயிச்சுட்டான், ஒரு மில்லியன் டாலர் ஜெயிச்சிருச்சு’ என நினைக்காதீர்கள். புதிய தலைமுறை ஜெயித்துள்ளது. தோல்வி அடைந்த இயக்குநர்களுக்கு இப்படம் நம்பிக்கை கொடுத்திருக்கிறது.
நாம் வெற்றி பெற, முதலில் நம்ம தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். நான் தோல்வி அடைந்துள்ளேன். என் தோல்வியை ஒவ்வொரு தடவையும் ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். தயாரிப்பாளர்கள் எல்லா நடிகர்களிடமும் உண்மையைச் சொல்வார்கள். எவ்வளவு ஓடி இருக்கிறது என்று சொல்வார்கள். ‘ஏன் மறைக்கறீங்க… மறைக்காதீங்க. எவ்வளவு ஓடி இருக்கு’ன்னு சொன்னாத்தான் யாரும் சம்பளம் ஏற்ற மாட்டாங்க. அப்போதுதான் உண்மையாக இருப்பார்கள்.
என்னுடைய பெரிய வசூல் ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டி புலி’ படமும்தான். அதனை இப்படம் தாண்டியிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. இனிவரும் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வர வேண்டும் என்பதால்தான் இதைச் சொல்கிறேன். மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கம் வந்து ரசிக்கிறார்கள். நல்ல படம் தந்தால் மக்கள் திரையரங்கம் வர தயாராக உள்ளார்கள்” என்று பேசினார் சசிகுமார்.