த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு, த்ரிவிக்ரம் இயக்கவுள்ள படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாக கூறி, அட்லி படத்தின் பணிகளைத் தொடங்கினார் அல்லு அர்ஜுன். இதனால் த்ரிவிக்ரம் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது வெங்கடேஷ் நடிக்கும் படத்தை த்ரிவிக்ரம் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கான பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஹரிகா ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
வெங்கடேஷ் படத்தினை முடித்துவிட்டு, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் த்ரிவிக்ரம். அல்லு அர்ஜுனுக்காக தயார் செய்யப்பட்ட அக்கதையில் தான் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முருகக் கடவுளை மையப்படுத்தி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.