த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த 2 படங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
‘குண்டூர் காரம்’ படத்துக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தி்னை இயக்கவிருந்தார் த்ரிவிக்ரம். இது தொடர்பான முதற்கட்ட பணிகளும் சில நாட்கள் நடைபெற்றன. ஆனால் அல்லு அர்ஜுன் தேதிகள் எப்போது என்பதில் குழப்பம் நீடித்தது. ‘புஷ்பா 2’ மாபெரும் வெற்றியடைந்த உடன், அட்லி இயக்கும் படத்துக்கு தேதிகளை ஒதுக்கி பணிகளைத் தொடங்கிவிட்டார் அல்லு அர்ஜுன்.
இதனைத் தொடர்ந்து த்ரிவிக்ரம் படத்தின் நிலை என்ன என்பதில் குழப்பம் நீடித்தது. அவரோ அடுத்த படத்துக்காக பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கினார். இறுதியாக வெங்கடேஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் த்ரிவிக்ரம். முழுக்க காமெடி, கமர்ஷியல் பாணியில் இப்படம் உருவாகிறது. இதனை முடித்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் த்ரிவிக்ரம்.
அல்லு அர்ஜுன் நடிக்கவிருந்த வரலாற்று கதையினை தான் ஜூனியர் என்டிஆர் வைத்து இயக்க முடிவு செய்திருக்கிறார் த்ரிவிக்ரம். இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களையுமே த்ரிவிக்ரமின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான நாக வம்சி தனது எக்ஸ் பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.