சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் – 2026ல் நடிகர் சூர்யா போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில் அதை பொய் செய்தி என திட்டவட்டமாக மறுத்துள்ளது அவரது தலைமை நற்பணி இயக்கம்.
இது தொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைதள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கaம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.
கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே சூர்யாவின் கவனம் இருக்கும். எங்கள் சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்தப் படம் ‘சூர்யா 46’ என இப்போது அறியப்படுகிறது.
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.
எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்.@Suriya_offl @rajsekarpandian pic.twitter.com/A8K4caAZDP