தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்து வந்த படத்துக்கு ‘அங்கீகாரம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
கே.ஜி.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் ‘அறம்’, ‘டோரா’, ‘ஹீரோ’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ராஜேஷ். பின்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தயாரிப்பில் இருந்து விலகியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு உடலமைப்பை முழுமையாக மாற்றி நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
தற்போது ராஜேஷ் நாயகனாக நடித்துள்ள படத்துக்கு ‘அங்கீகாரம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இதன் கதை விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத் துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது என்கிறது படக்குழு.
ராஜேஷ் உடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக விஸ்வநாத், சண்டைப் பயிற்சியாளராக பீட்டர் ஹெயின் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த் – அஜித்பாஸ்கர் – அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஜெபி தென்பாதியான் இயக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.