சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி, ஃபெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி ஃபெப்சி கடிதம் அனுப்பி இருந்தது.
இதனால் படப்பிடிப்பு மற்றும் படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணா, “ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள நிலையில் ஃபெப்சி உள்ளிட்ட திரைத் துறை சங்கங்களின் ஒத்துழையாமை முடிவால் சினிமா தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
ஃபெப்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.மோகன கிருஷ்ணன், “இரு சங்கங்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2025 மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது. எனவே, அவர்களுடன் பணியாற்றுமாறு தங்களை கட்டாயப்படுத்த முடியாது.குறைந்த ஊதியத்துக்கு அதிக நேரம் தங்களது சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை வாங்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்,” என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இரு சங்கங்கள் இடையேயான பிரச்சினையை பேசி தீர்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது?’ என கேள்வி எழுப்பி, யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என கலந்தாலோசித்து தெரிவிக்க இரு தரப்புக்கும் உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.