தனுஷுக்கு தேசிய விருதுகளை வெல்வது இயல்பாகிவிட்டது என்று சிரஞ்சீவி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் தமிழை விட தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனை முன்னிட்டு வெற்றி விழா ஒன்று படக்குழுவினருடன் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். இவ்விழாவில் சிரஞ்சீவி பேசும் போது, “தனுஷ் நடித்து வரும் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக நாகார்ஜுனா சொன்னபோது ஆச்சரியப்பட்டேன். அவரை அணுக இயக்குநருக்கு எப்படி தைரியம் வந்தது, அதே போல் நாகார்ஜுனா நடிக்கிறேன் என்று சொன்னபோது என்ன கற்பனை செய்திருப்பார் என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. நாகார்ஜுனா இந்த கதாபாத்திரத்தில் நடித்தது தான் முதல் பெரிய வெற்றி.
சேகர் கம்முலா எப்போதுமே அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்குபவர். தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் பலருடைய இதயங்களில் இடம்பிடித்துள்ளார். அவரது வெள்ளி விழாவுக்கு வாழ்த்துகள். அதேபோல், நாகார்ஜுனா தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துகிறார். ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, அவரது அமைதியான நடத்தை மற்றும் அணுகுமுறையிலும் கூட.
’குபேரா’ படத்தில் என்னை நெகிழ வைத்த கதாபாத்திரம் தேவா தான். தனுஷின் நட்சத்திர அந்தஸ்தில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிப்பது அவரால் மட்டுமே முடியும். அவரை மனதில் வைத்தே இந்த கதாபாத்திரத்தை சேகர் கம்முலா எழுதியிருப்பார் என நம்புகிறேன். தெலுங்கு திரையுலகில் யாரேனும் தேசிய விருது வென்றால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். ஆனால், தனுஷுக்கு தேசிய விருதுகளை வெல்வது இயல்பாகிவிட்டது.
இப்படத்தில் நடிப்புக்காக இன்னொரு தேசிய விருதை வெல்வார் என நம்புகிறேன். அப்படி வெல்லவில்லை என்றால் அந்த விருதுக்கு மதிப்பே இல்லை. இப்போதெல்லாம் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவது எளிதல்ல. ஆனால் ஒரு வலுவான, உள்ளடக்கம் சார்ந்த படம், குறிப்பாக நிச்சயமற்ற காலங்களில் வெற்றிபெறும் போது, அது தொழில்துறையில் உள்ள நம் அனைவருக்கும் நம்பிக்கையைத் தருகிறது” என்று சிரஞ்சீவி பேசினார்.