‘தனி ஒருவன் 2’ குறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் இயக்குநர் மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா மேடையேறினார்கள். அவர்களிடம் ‘தனி ஒருவன் 2’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மோகன் ராஜா “‘தனி ஒருவன் 2’ மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி. எங்களுடைய பெருமைக்குரிய படம் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா சொல்லிக் கொண்டே இருப்பார். கதை எல்லாம் கேட்டுவிட்டு ரொம்ப சூப்பரா இருக்கு, சரியான நேரம் வரும் போது சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்” என்றார்.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அர்ச்சனா, “மோகன் ராஜா சாரிடம் பேசினால் 4 கதைகள் சொல்வார். ஒவ்வொன்றுமே அற்புதமாக இருக்கும். ஒரு கதையை மட்டும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தான் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.
‘தனி ஒருவன் 2’ பெரிய முதலீட்டைக் கொண்ட படம். முதல் பாகத்தை விட மிகவும் பெரியதாக இருக்கும். ஆகையால், அதை சரியான நேரத்தில் அறிவிக்க காத்திருக்கிறோம். ரவி மோகன், நயன்தாரா என நிறைய நடிகர்கள் இருப்பதால் அனைவருடைய தேதிகள் ஒன்றாக அமைய வேண்டும். அது ஒரு அற்புதமாக கதை” என்று தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் ரவி மோகன், அரவிந்த் சுவாமி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.