மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, நாசர், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை விமர்சன ரீதியில் வெகுவாக சாடினர். இதனிடையே, ‘தக் லைஃப்’ பார்த்துவிட்டு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
‘தக் லைஃப்’ தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது, “‘தக் லைஃப்’ படம் பார்த்தேன். அசந்துவிட்டேன். நல்ல படம். மிக நல்ல படம். ஆனால், ஏன் இதை சிலர் மோசமாக விமர்சித்தார்கள் என்பது எனக்கு கொஞ்சம்கூட விளங்கவில்லை. ஒரு அண்டர்வேர்ல்டு கேங்ஸ்டர் படத்துக்குத் தேவையான எல்லாமும் சரியான விகிதத்தில் இருந்தது. இதுவே ஆங்கில மொழியில் ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தால் ரசித்துப் பாராட்டியிருப்போம். அல்லது, ரசித்தது போல நடித்திருப்போம்.
ஒரு நல்ல படத்தின் அத்தனை அம்சங்களும் உயர் தரத்தில் இருந்தன. ஆழமான கதை, அட்டகாசமான திரைக்கதை, அசரவைக்கிற படப்பிடிப்பு இடங்கள், அதை அருமையாகக் கண்முன் கொண்டுவந்த ஒளிப்பதிவு, சர்வதேச தரத்தில் பின்னணி இசை, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்கள், அவர்களின் அடக்கமான நடிப்பு, அற்புதமான ஒலிக்கலவை, படத்தை விறுவிறுப்பாக்கிய படத்தொகுப்பு என எல்லாமே ஒருசேர அசத்திய கலவை. ஒரு காட்சிகூட சலிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வியப்பு!
முடிவை பலவிதத்தில் சிந்தித்துப் பார்த்தேன். சிம்புவின் கதாபாத்திரம் இறக்காமல், கமல் கதாபாத்திரம் இறந்திருந்தால் எப்படியிருக்கும்? இரு கதாபாத்திரங்களும் இறந்து நாசர் கதாபாத்திரம் நிலைத்து நின்றால் எப்படியிருக்கும்? எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், படத்தின் சிறப்புக்கும் அதற்கும் தொடர்பில்லை. வெவ்வேறு உணர்வுகளோடு வெளியேறியிருப்போம், அவ்வளவுதான்.
இதுவரை இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் போய்ப் பாருங்கள். சமூக ஊடகங்கள் அரசியலையும் கலையையும் போட்டுக் குழுப்பிக்கொள்கிற மலிவான காலகட்டத்தின் சித்து விளையாட்டுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். மணிரத்னமும், கமல்ஹாசனும், ரஹ்மானும், ரவி.கே.சந்திரனும் இந்தியாவுக்குக் கிடைத்த வரங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இப்பதிவுக்கு பலரும் எதிர்வினை ஆற்றினார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜேம்ஸ் வசந்தன், “ஒரு படம் பிடிக்கிறது, பிடிக்கவில்லை, அவ்வளவுதான். இதில் வாதத்துக்கெல்லாம் இடமே இல்லை. ஆனால், இந்திய திரைப்பட ரசிகர்கள், குறிப்பாக தென்னிந்திய ரசிகர்கள் திரைப்படங்களை வேறுவிதமாக பார்ப்பதும் இந்தக் கருத்துகளுக்கு காரணியாகி விடுகிறது. எந்தக் கருத்துமே எல்லாரையும் உள்ளடக்காது. விதிவிலக்குகள் உண்டு. அதனால் நான் அப்படியில்லை என்று சொல்லிக்கொண்டு வரவேண்டாம். இது பெரும்பான்மையை மட்டுமே குறிக்கிறது.
நடிகனையும், கதாபாத்திரத்தையும் பிரித்துப் பார்க்கிற மனப்பான்மை இல்லாமைதான் அந்த இயல்பு. இப்போது ‘தக் லைஃப்’ படத்துக்கு நேர்ந்ததும் அதன் தாக்கம் தான். பலர் இந்தப் படத்தில் த்ரிஷா கதாபாத்திரம் தேவையற்றது. கமல் தன் மனைவியை ஒருபுறமும், த்ரிஷாவை ஒருபுறமும் வைத்துக் கொள்வது கலாச்சரக் கேடு என்றெல்லாம் விமர்சிக்கும்போது இது நிரூபணமாகிறது.
கதாநாயகன் நல்லவனும், இலக்கணப் புருஷனுமாய் இருக்கிற படங்களைப் பார்த்தே பழக்கப்பட்டு, கமல்ஹாசன் இப்படி செய்திருக்கக் கூடாது என்று சொல்லும்போது அவர்கள் படங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. இந்தப் பார்வை சரி, தவறு என்பதல்ல. திரைப்படம் என்னும் கலையை முழுமையாக சுவைக்க முடியாமல் போய்விடுகிறது இவர்களுக்கு.
உலகம் முழுவதிலும் பொதுவாக கமர்ஷியல் படங்கள் என்றழைக்கப்படுகிற பொழுதுபோக்குப் படங்கள் ஊருக்கு உழைப்பவனையும், இந்த உலகத்தை தன் சாகசத்தால் காப்பாற்றுகிறவனையும், பொதுநலனுக்காகப் போராடுகிறவனையும் நாயகனாகக் கொண்டிருக்கும். அந்த நாயக நடிகரை நிஜவாழ்வு நல்லவனாகவே நம்பிவிடுகிற குழந்தை மனதுக்கு நம்மைக் கொண்டுபோய் விடும். இன்னொரு வகைப் படம் தப்பானவனையும், தவறானவனையும் நாயகனாகக் கொண்டிருக்கும். இவ்வகைப் படங்கள் அவ்வப்பொழுது வருவதுண்டு.
‘காட்ஃபாதர்’ தொடங்கி ’ ‘தக் லைஃப்’ வரை. அண்டர்வேர்டு கதைகள். அடிப்படைக் கல்வி பெற்று, உயர் கல்வி பெற்று, உழைத்து, சமூகத்தோடு ஒன்றி வாழ்பவரின் உலகம் ‘சிவில் சொசைட்டி’. படிப்பறிவின்றி, முரட்டுத்தனமாக வாழ்ந்து, எப்படியும் சம்பாதிக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சுயநலமாக வாழ்பவரின் உலகம் ‘அண்டர்வேர்ல்டு’.
சக்திவேல் ஒரு தவறான ஆள். கீழுலகத்தைச் சேர்ந்தவன். அவனைச் சுற்றியிருக்கும் அனைவரும் வாழ்வதற்கு தவறானப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர். மனித உயிர்களின் மாண்பு தெரியாத கூட்டம். தங்கள் பிழைப்புக்காக யாரையும் கொல்லத் தயங்காதவர். சமூகத்தின் அழுக்குப் பணம் மட்டுமே அவர்கள் வாழ்வாதாரம். அந்த சக்திவேலிடம் ஒழுக்கத்தையும் நன்னடத்தையும் எதிர்பார்க்கிற பரிதாபத்துக்குரிய தமிழ் திரைப்பட ரசிகனை எப்படிப் பண்படுத்துவது?
திரைப்படங்களைப் பொழுதுபோக்காகப் பார்ப்பவருக்கு இந்தப் பிரச்சனை இருக்காது. நடிகர்களை அளவுக்கதிகமாக ரசிப்பவர்களுக்கு இந்த மயக்கம் வருவதைத் தவிர்க்க இயலாது. பெரியர்களுக்கு இந்த மனமுதிர்ச்சி வந்திருக்கும் என்பதால்தான் சிறியவர் பெரியவர்களின் ஆலோசனையுடன் இத்தகையப் படங்களைப் பார்க்கவேண்டும் என்று சென்சார் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவர்கள் தவறானவர்கள் என்று முதலிலேயே சொல்லிவிட்டால் இளம் மனங்களுக்கு அந்தத் தெளிவு வந்துவிடும்.
ஆனால், இயக்குநரின் ஒரு தவறு ‘விண்வெளி நாயகா’ பாடல்தான். சக்திவேல் சமூக விரோதி. அவனை எப்படி இப்படி ஒரு பாடல் வைத்துக் கொண்டாடலாம்? அவன் ஒன்றும் சீர்திருத்தவாதி இல்லையே. சுயநலக்காரன்தானே!” என்று தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.