தமிழகத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மாபெரும் வசூல் வெற்றி பெற்றிருக்கிறது.
மே 1-ம் தேதி சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவராஜ் கணேசன் தயாரித்து, அவரே தமிழகத்தில் வெளியிட்டார். இந்த சின்னப் படத்துக்கு ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார் என்று பலரும் பேசினார்கள்.
தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வசூலில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முதல் நாளில் ரூ.2 கோடி வசூல் செய்த இப்படம், 11-வது நாளில் ரூ.6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும், சசிகுமார் நடிப்பில் ‘குட்டிப்புலி’ படமே அதிக வசூல் செய்த படமாக இருந்தது. தற்போது அதனை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் முறியடித்திருக்கிறது.
கேரளா மற்றும் கர்நாடகாவிலும் நல்ல வசூல் செய்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலை கடக்கும் என்று கூறுகிறார்கள். இப்படியான வசூலின் மூலம் தயாரிப்பாளருக்கு 2 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்த படமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.