வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, சுனில் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.
பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார். இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இயக்கியுள்ளனர். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 20-ம் தேதி வெளியாகிறது.
சென்னையில் நடந்த இதன் செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர் கூறும்போது, “எட்டு வருடங்களுக்கு முன் இப்படத்தின் கதையை, பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் வியூக தலைமையாளர் மனோஜ் பெனோவிடம் கூறினேன். தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் இதைத் தயாரித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இதன் கதையை எழுதும்போதே வைபவ் தான் கதாநாயகன் என்று முடிவெடுத்து விட்டேன்; அதேபோல தமிழ் தெரிந்த கதாநாயகி வேண்டும் என்பதால் அதுல்யா ரவியை தேர்ந்தெடுத்தோம்.
இசையமைப்பாளர் இமானும் நானும் பள்ளிக்காலத் தோழர்கள். அவர் இந்தப் படத்தில் பணியாற்றியது கனவு பலித்தது போன்று இருந்தது. மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது 5 படங்களில் பணியாற்றியது போல இருந்தது. இது கலகலப்பான திரைப்படம். படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சிரிக்கலாம். வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கச் செல்லும் ஒரு கோஷ்டி செய்யும் ரகளைதான் கதை” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.