சு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படமொன்றில் நடித்து தயாரிக்கவுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் படுதோல்வியை தழுவியது. இதனால் தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். அடுத்ததாக சண்டை இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல்.
ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி இந்தாண்டிற்குள் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தினை முடித்துவிட்டு சு.அருண்குமார் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் கமல்.
’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு அடுத்த படம் என்ன என்பதை அருண்குமார் இன்னும் முடிவு செய்யவில்லை. இதனிடையே ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் அருண்குமார். அதில் வேறொரு நாயகன் தான் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது அதில் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அன்பறிவ் படத்தினை முடித்துவிட்டு அருண்குமார் படத்தினையும் உடனடியாக தொடங்க முடிவு செய்திருக்கிறார் கமல்.