சிவகார்த்திகேயனின் அடுத்த படங்கள் என்னென்ன என்பது தெரியவந்துள்ளது.
‘மதராஸி’ படத்தினைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதன் 70% படப்பிடிப்பு முடிவுற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதால், இறுதிகட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டான் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்து வருகிறது.
‘பராசக்தி’ படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அடுத்ததாக ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பூஜை விரைவில் நடைபெற இருக்கிறது. இதனை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சிபி சக்கரவர்த்தி படத்தினைத் தொடர்ந்து சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு புஷ்கர் – காயத்ரி இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.