செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்டப் படங்களைத் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே.அக்ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படத்துக்கு ‘சிறை’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார். நாயகிகளாக அனந்தா, அனிஷ்மா நடித்துள்ளனர். எஸ். எஸ்.லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். “நடிகரும் ‘டாணாக்காரன்’ இயக்குநருமான தமிழ், தான் சந்தித்த அனுபவத்தை வைத்து, இதன் கதையை எழுதியுள்ளார். போலீஸ்காரருக்கும் விசாரணைக் கைதிக்குமான பயணம்தான் இந்தப் படத்தின் கதை. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இதன் கதை, சிவகங்கை பின்னணியில் நடக்கிறது. இந்தப் படத்துக்காக அக்ஷய்குமார் நடிப்புப் பயிற்சி பெற்றுள்ளார்” என்றது படக்குழு. இதன் முதல் தோற்றப் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்டார்.